தமிழகம்

பிளஸ் 1 பொதுத் தேர்வுக்குப் பதிலாக செமஸ்டர் முறையைக் கொண்டுவர வேண்டும்: திருமாவளவன்

செய்திப்பிரிவு

பிளஸ் 1 வகுப்பில் பொதுத் தேர்வுக்குப் பதிலாக செமஸ்டர் முறையை தமிழக அரசு கொண்டுவர வேண்டும் என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''பள்ளிக் கல்வித்துறையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்திருத்தங்களை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம். அந்த சீர்திருத்தங்களின் ஒரு அங்கமாக பிளஸ் 1 வகுப்புக்குப் பொதுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது மாணவர்களின் சுமையை அதிகரிப்பதாக உள்ளது. எனவே பொதுத் தேர்வுக்குப் பதிலாக செமஸ்டர் தேர்வுமுறையை நடைமுறப்படுத்த வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் நோக்கில் பெரும்பான்மையான தனியார் பள்ளிகள் பிளஸ் 1 வகுப்புப் பாடங்களை நடத்தாமல் இரண்டு ஆண்டுகளிலும் பிளஸ் 2 பாடங்களையே நடத்திவந்தன. அதனால் உயர்கல்வி வகுப்புகளில் சேரும் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். எனவேதான் பிளஸ் 1 வகுப்பிலும் பொதுத் தேர்வு நடத்தவேண்டும் என்ற கோரிக்கை சிலரால் முன்வைக்கப்பட்டது.

அதில் நியாயம் இருந்தாலும் அது மாணவர்களின் தேர்வுச் சுமையை அதிகரித்து மன அழுத்தத்துக்கு அவர்களை ஆளாக்கிவிடும் என்பதால் பட்ட வகுப்பில் இருப்பதுபோல இருபருவத் தேர்வுமுறையை பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் அறிமுகப்படுத்தவேண்டும் என வலியுறுத்துகிறோம்.

பள்ளிக் கல்வியின் பகுதியாக பள்ளிகளில் இடை நிறுத்தத்துக்கு முதன்மையான காரணம் நமது தேர்வுமுறைதான். தரம் தகுதி என்ற தவறான கருத்தாக்கங்களின் அடிப்படையில் நமது தேர்வுமுறை அமைக்கப்பட்டுள்ளது. மனப்பாடம் செய்வதை ஊக்குவிக்கும் இப்போதைய தேர்வுமுறை மாணவர்களின் சிந்திக்கும் திறனையே பாழாக்கிவிடுகிறது. இந்த முறையில் கல்வி பயிலும் மாணவர்கள், வாழ்க்கையின் எந்தவொரு பிரச்சினையையும் எதிர்கொள்ள முடியாதவர்களாக எல்லாவற்றுக்கும் ஆயத்தமான முன்பே தயாரிக்கப்பட்ட தீர்வுகளைத் தேடுகிறவர்களாக மாற்றப்படுகிறார்கள். இந்த சார்பு மனோநிலை மாணவர்களைத் தற்சார்பு அற்றவர்களாக்கிவிடுகிறது.

இந்தத் தேர்வுமுறையில் மாற்றம் கொண்டுவந்து பள்ளியில் சேர்கிற அனைவருமே பள்ளிக் கல்வியை முடித்துவிட்டு உயர் கல்வியைப் பெறுவதற்கு ஏற்பாடு செய்யவேண்டும். அதற்கேற்ப நமது உயர்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கையையும் உயர்த்த வேண்டும்.

ஒரு நாட்டின் வளங்களிலேயே மிகவும் சிறந்தது மனித வளம் தான். அதைப் புரிந்துகொண்ட நாடுதான் முன்னேறும். எனவே பள்ளிக் கல்வித்துறையில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்களுக்கு ஒத்திசைவான முறையில் உயர் கல்வித்துறையிலும் உரிய சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்'' என திருமாவளவன் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT