ஈரோடு: திமுக தேர்தல் வாக்குறுதிப்படி, 5 மாதங்களில் மகளிருக்கான உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவனை ஆதரித்து, கணபதி நகர் ராஜாஜிபுரம் பகுதியில் அவர் நேற்று பேசியதாவது: அதிமுக வேட்பாளர் பிரச்சாரத்துக்குச் செல்லும் இடங்களில் எல்லாம் விரட்டி அடிக்கப்படுகிறார். அந்த விரக்தியில், பெரியார் மண்ணில் ‘மீசை வைத்த ஆம்பளையா’ என்று விமர்சிக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி. மோடிக்கும், ஆளுநருக்கும் அடிமையாக செயல்பட்ட அவர், யாருக்குமே உண்மையாக இருந்ததில்லை. டெல்லி எஜமானர்களைத் தவிர.
ஆட்சியில் இருக்கும்வரை இபிஎஸ் - ஓபிஎஸ் ஒன்றாக இருந்தனர். ஆட்சிபோன உடனேயே வீதிக்கு வந்து சண்டை போடுகின்றனர். போட்டி போட்டுக் கொண்டு கமலாலயம் செல்கின்றனர். திமுக ஆட்சி அமைந்து 2 ஆண்டுகளில், சென்னையில் ரூ.240 கோடியில் கிங்ஸ் மருத்துவமனை, மதுரையில் கலைஞர் நூலகம் கட்டி முடிக்கப்பட்டு விட்டது. 2019-ல்பிரதமர் மோடி மதுரைக்கு வந்து, ரூ.3 ஆயிரம் கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்றார். அதற்காக ரூ.300 கோடி செலவு செய்தனர். ஆனால், இதுதான் அதிமுகவும், பாஜகவும் கட்டிய எய்ம்ஸ் மருத்துவமனை. (எய்ம்ஸ் என எழுதப்பட்ட செங்கல்லை காட்டினார்).
திமுக தேர்தல் வாக்குறுதியான மகளிருக்கு ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் அதிகபட்சமாக 5 மாதங்களில் செயல்படுத்தப்படும்.
ஈரோட்டில் கனி மார்க்கெட் ஜவுளி மையம், சத்தி சாலை பேருந்து நிலைய மேம்பாடு, தினசரி மார்க்கெட் மேம்பாடு, வணிகவளாகம் என பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தேர்தல் வெற்றிக்குப் பிறகு, ரூ.1,000 கோடியில் பல்வேறு திட்டங்களை முதல்வர் அறிவிக்க உள்ளார். இவ்வாறு உதயநிதி ஸ்டா லின் பேசினார்.