காங்கிரஸ் எஸ்சி அணித் தலைவர் ரஞ்சன் குமார் | கோப்புப் படம் 
தமிழகம்

ஐஐடி மாணவர்கள் தற்கொலை: காங்கிரஸ் சார்பில் நாளை மெழுகுவர்த்தி ஊர்வலம்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. அணித் தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனமான ஐஐடி-ல் படிக்கும் மாணவர்களின் தற்கொலை நிகழ்வுகள் தொடர்வது மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. கடந்த பிப்ரவரி 12-ம் தேதி மும்பை ஐஐடி-ல் படித்த தர்ஷன் சோலங்கி என்ற 19 வயது தலித் மாணவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், சென்னை ஐஐடி-ல் படித்த 24 வயதான முதுநிலைப் பொறியியல் மாணவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

இது தொடர்பாக மத்திய பாஜக அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. ஐஐடி-ல் 34 பேர் தற்கொலை செய்துள்ளனர். இதில் 18 மாணவர்கள் பட்டியலின, பின்தங்கிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். இத்தகைய தற்கொலைகளால் மாணவர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாவது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

உயர்கல்வி நிறுவனங்களில் மேல்ஜாதியினரின் ஆதிக்கமும், ஜாதிய அடக்குமுறைகளும் தலை விரித்தாடுவதால்தான் இத்தகைய தற்கொலைகள் நிகழ்ந்து வருகின்றன. எனவே, தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. அணி சார்பில் நாளை இரவு 7 மணிக்கு சென்னை கிண்டி ஐஐடி வளாகம் முகப்பில் கண்டன பதாகைகளைத் தாங்கி மெழுகு வர்த்தி ஊர்வலம் நடைபெற உள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT