மதுரை வந்த குடியரசு தலைவர் 
தமிழகம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தரிசனம்

செய்திப்பிரிவு

மதுரை: இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று (சனிக்கிழமை) காலை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தார். தொடர்ந்து கோவை ஈசா யோகா மையத்தில் இன்று நடக்கும் சிவராத்திரி சிறப்பு நிகழ்ச்சியில் இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்கிறார்.

இதற்காக, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு புது டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையத்துக்கு இன்று (பிப்.18) காலை 11.40 மணிக்கு வந்தார். அவரை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் வரவேற்றனர்.

இதனைத் தொடர்ந்து 11.50-க்கு விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு, பெருங்குடி, அவனியாபுரம், வில்லாபுரம், தெற்குவாசல், கீழவாசல் சந்திப்பு, விளக்குத் தூண், வெங்கலக்கடை தெரு வழியாக கிழக்கு சித்திரை வீதிக்கு மதியம் 12.15 மணிக்கு வந்தடைந்தார். 12.15 மணிக்கு அம்மன் சன்னதி பகுதியில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பின்பு மீனாட்சி அம்மனையும், சுந்தரேசுவரரையும் தரிசனம் செய்தார்.

கோயிலை சுற்றிப் பார்த்துவிட்டு 12.45 மணிக்கு மேல் காரில் புறப்பட்டு அழகர்கோவில் சாலையிலுள்ள அரசு சுற்றுலா மாளிகைக்குச் செல்கிறார். அங்கு மதிய உணவுக்குப் பின்பு கோரிப்பாளையம், கீழவாசல் வழியாக விமான நிலையம் சென்றடைகிறார். பின்னர் 2.10 மணிக்கு தனி விமானம் மூலம் கோவைக்கு புறப்பட்டுச் செல்கிறார்.

குடியரசுத் தலைவர் வருகையையொட்டி மதுரையில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. விமான நிலையம், மீனாட்சி அம்மன் கோயில் பகுதி, குடியரசுத் தலைவர் காரில் செல்லும் வழித்தடப் பகுதிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கோயிலைச் சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

SCROLL FOR NEXT