சென்னை: சென்னை நோக்கி வரும் விரைவு பேருந்துகளை தாம்பரம் வழியாக கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு இயக்க வேண்டும் என விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அனைத்து கிளை மேலாளர்கள் உள்ளிட்டோருக்கு அவர் அனுப்பிய சுற்றறிக்கை: விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் சென்னைக்கு வரும் பயணிகளின் வசதிக்காக அனைத்து ஊர்களில் இருந்து சென்னைக்கு வந்தடையும் பேருந்துகள் அனைத்தும் தாம்பரம் வழியாக இயக்க அறிவுறுத்தப்படுகிறது.
மேலும், தாம்பரம் மாநகர பேருந்து நிறுத்தத்துக்கு அடுத்து இடதுபுறமாக நிறுத்தி பயணிகளை இறக்கிவிட அனைத்து ஓட்டுநர், நடத்துநர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதன் மூலம் தாம்பரம், குரோம்பேட்டை, ஆசர்கானா, வடபழனி செல்லும் பயணிகள் பயன் அடைவதுடன் போக்கு வரத்துக் கழகத்துக்கு வருவாய் அதிகரிக்க வாய்ப்பும் ஏற்படும்.
குறிப்பாக மாலை 5 மணிக்கு மேல் பெருங்களத்தூர் வழியாக சென்னைக்கு வரும் பேருந்துகள் மட்டும் மதுரவாயல் சுங்கச்சாவடி வழியாக கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு இயக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.