ஆட்சியர் கார்மேகம் | கோப்புப் படம் 
தமிழகம்

பொதுமக்கள் எங்கிருந்தும், எந்நேரத்திலும் பட்டா மாறுதல் செய்ய இணைய வசதி அறிமுகம்

செய்திப்பிரிவு

சேலம்: சேலம் மாவட்டத்தில் பொதுமக்கள் எங்கிருந்தும், எந்நேரத்திலும் பட்டா மாற்றம் செய்து கொள்ள இணையம் வாயிலாக விண்ணப்பிக்கும் வசதி அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது, என்று ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பொது மக்கள் இருக்கும் இடத்தில் இருந்தே எங்கிருந்தும், எந்நேரத்திலும் tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையதள முகவரியை உள்ளீடு செய்து இணையம் வாயிலாக பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், நில உட்பிரிவுக்கான கட்டணம், செயலாக்க கட்டணங்களை இணைய வழியிலேயே செலுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில், கிராமப்புற, நகர்ப்புற நில ஆவணங்கள் கணினிபடுத்தப்பட்டு, தமிழ் நிலம் என்னும்மென்பொருள் மூலம் இணையவழி பயன்பாட்டுக்கு கொண்டுவரப் பட்டுள்ளது. கணினிபடுத்தப்பட்ட வரைபடங்களை, தனித் தனி நகர புலங்களுக்கான வரை படங்களாக மேற்குறிப்பிட்டுள்ள இணைய தளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளும் புதிய வசதி மூலமாக நில வரைபடங்களை கட்டணமின்றி பெறலாம்.

இவை, மனை அங்கீகாரம், வங்கிக்கடன் பெறுதல் போன்ற இதர சேவைகளுக்கு அத்தியாவசியமாக விளங்குகிறது. விண்ணப்ப நிலையை eservices.tn.gov.in eservicesnew/login/Appstatus.html என்ற இணையதள முகவரியை உள்ளீடு செய்து, பட்டாமாறுதல் மனுவின்நிலையை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம். பட்டா மாறுதல் நடவடிக்கையின்போது, ஒவ்வொரு நிலையும் குறுஞ் செய்தி வாயிலாக மனுதாரருக்கு தெரிவிக்கப்படும்.

பட்டா மாறுதல் மனு அங்கீகரிக்கப்பட்ட பின்னர், பொதுமக்கள் தங்களது பட்டா மாறுதல் உத்தரவின் நகல், பட்டா / சிட்டா, புலப் படம், அ-பதிவேடு ஆகியவற்றை eservices.tn.gov.in என்ற இணையவழி சேவையின் மூலமாககட்டணமின்றி பார்வையிட்டு, பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம், என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT