சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில் சிறப்பாகச் செயல்பட்ட ராணுவப்படை, மத்திய ரிசர்வ் காவல் படை, தமிழ்நாடு பேரிடர் நிவாரணப் படை, தேசிய மாணவர் படை (ஆண்கள்), சிற்பி பெண்கள் படை ஆகிய படைப்பிரிவுகளுக்கும். குடியரசு தினவிழா அணிவகுப்பை சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்த இந்திய விமானப்படை குரூப் கேப்டன்களுக்கும் சென்னை தலைமைச் செயலகத்தில், கேடயங்களை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பித்தார். உடன் சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், பொதுத்துறை செயலர் டி.ஜகந்நாதன், துணைச் செயலர் (மரபு) எஸ்.அனு உள்ளிட்டோர். 
தமிழகம்

குடியரசு தின அணிவகுப்பில் சிறப்பாக செயல்பட்ட படைப் பிரிவினருக்கு கேடயம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் நடந்த குடியரசு தின விழா அணிவகுப்பில் சிறப்பாக செயல்பட்ட படைப் பிரிவினர் மற்றும் அணிவகுப்பை சிறப்பாக ஒருங்கிணைத்த விமானப் படை
குரூப் கேப்டன்களுக்கு கேடயங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

ஆண்டுதோறும் ஜன.26-ம் தேதி குடியரசு தினத்தன்று சென்னை மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் பல்வேறு படைப் பிரிவுகளின் அணிவகுப்பு, துறைகளின் சார்பில் அரசின் திட்டங்களை விளக்கும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, தென்னக பண்பாட்டு மையம், செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் கலைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறும்.

சிறந்த படைப்பிரிவுகள்: இந்த ஆண்டு முதல், குடியரசு தின விழா அணிவகுப்பில் சிறப்பாக செயல்படும் படைப் பிரிவினருக்கு பரிசு வழங்க முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்தார். அதன்படி, கடந்த ஜன.26-ம் தேதி நடந்த குடியரசு தினவிழா அணிவகுப்பில் கலந்துகொண்ட படைப் பிரிவினரில் சிறப்பாக செயல்பட்ட ராணுவ படைப் பிரிவு சார்பில் தலைவர் கேப்டன் யாஷ் தாதல், மத்திய ரிசர்வ் காவல் படைப் பிரிவு சார்பில் உதவி கமாண்டன்ட் மனோஜ் கே.ஆர்.பாண்டே ஆகியோருக்கும், தமிழ்நாடு பேரிடர் மீட்பு படைப் பிரிவு சார்பில் ஆய்வாளர் வி.சுரேஷ்குமார், தேசிய மாணவர் படை (ஆண்கள்) சார்பில் தலைவர் என்.திலிப், சிற்பி பெண்கள் படைப் பிரிவு சார்பில் தலைவர் எஸ்.மதினா, குடியரசு தினவிழா அணிவகுப்பை சிறப்பாக ஒருங்கிணைத்த இந்திய விமானப் படை குரூப் கேப்டன்கள் மஞ்சு பாண்டே, முகேஷ் பரத்வாஜ் ஆகியோருக்கும் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் நேற்று கேடயங்களை வழங்கினார்.

இந்நிகழ்வின்போது சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், பொதுத்துறை செயலர் டி.ஜகந்நாதன், துணை செயலர் (மரபு) எஸ்.அனு ஆகியோர் உடன் இருந்தனர்.

SCROLL FOR NEXT