தமிழகம்

அசல் சான்றிதழை தராமல் இழுத்தடிக்கும் கல்லூரி நிர்வாகம் மீது அரசு நடவடிக்கை: கவுரவ விரிவுரையாளர்கள் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாடு அனைத்து அரசு கல்லூரி யுஜிசி தகுதி கவுரவ விரிவுரையாளர்கள் சங்க தலைவர் வெ.தங்கராஜ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் 167 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 5,303 கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு புதிதாக 1,895 கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்க உயர்கல்வித் துறை முடிவு செய்து அதற்கான பணி நடைபெற்று வருகிறது.

இவர்களுக்காக வெளியிடப்பட்ட தேர்வு பட்டியலில் 1,320 கவுரவவிரிவுரையாளர்கள் மட்டுமே தற்போது பணியில் சேர்ந்துள்ளனர். மீதமுள்ள 30 சதவீதம் பேர் பணியில் சேரவில்லை. இவர்கள் நேர்முகத் தேர்விலும் கலந்து கொள்ளவில்லை. ஏனென்றால், தேர்வான பெரும்பாலானோர் தனியார் பள்ளி, கல்லூரிகளில் பணியாற்றி வருவதால், அவர்களது அசல் சான்றிதழ்களை நிர்வாகங்கள் வழங்க மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும், அசல் சான்றிதழைத் தர வேண்டுமானால் 3 மாத சம்பளத் தொகையை கொடுக்க வேண்டும் என கூறுகின்றனர். எனவே,தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அசல் சான்றிதழ்களை வழங்காமல் இழுத்தடிக்கும் தனியார் கல்லூரி நிர்வாகங்களின் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT