ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாளான இன்று (பிப்.10) 8 பேர் தங்களது வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 31-ம் தேதி தொடங்கி, 7-ம் தேதி நிறைவடைந்தது. காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர், அமமுக மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 96 பேர், 121 மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். நேற்று முன்தினம் (பிப்.8) வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன. இதில், ஓபிஎஸ் அணி வேட்பாளர் செந்தில் முருகனின் வேட்புமனு உள்ளிட்ட 38 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஈவிகேஎஸ்.இளங்கோவன் (காங்கிரஸ்), கே.எஸ்.தென்னரசு (அதிமுக), ஆனந்த் (தேமுதிக), மேனகா நவநீதன் (நாம் தமிழர்), சிவ பிரசாந்த் (அமமுக) மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உள்ளிட்டோரின் 83 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற இன்று (பிப். 10) மாலை 3 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டது. இதன்படி 8 பேர் மனுக்களை வாபஸ் பெற்றனர். குக்கர் சின்னம் ஒதுக்கப்படாததால் அமமுக வேட்பாளர் சிவ பிரசாந்த் வேட்புமனுவை வாபஸ் பெற்றார். மேலும் 7 பேர் தங்களது வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர்.
இறுதியாக ஈரோடு கிழக்கு தொகுதியில் 75 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்நிலையில், சின்னம் ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதன்பிறகு மாலை 5 மணிக்கு பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது.
வாக்கு சேகரிப்பு தீவிரம்: ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து 25-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோரும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேமுதிக வேட்பாளர் ஆனந்த், நாம் தமிழர் வேட்பாளர் மேனகா நவநீதன் ஆகியோரும் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவனை ஆதரித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வரும் 24, 25-ம் தேதிகளில் வீதிவீதியாகப் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.
வரும் 24-ம் தேதி ஈரோடு செல்லும் முதல்வர் ஸ்டாலின், அங்குள்ள சக்தி சுகர்ஸ் விருந்தினர் மாளிகையில், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். பின்னர், வெட்டுக்காட்டு வலசு பகுதியில் பிரச்சாரத்தை தொடங்குகிறார். தொடர்ந்து, 24, 25-ம் தேதிகளில் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் அவர் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதேபோல, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரும் 20-ம் தேதி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.