சென்னை: சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் குடும்ப அட்டை குறைதீர் முகாம் நாளை (பிப்.11) நடைபெறுகிறது.
இதுகுறித்து உணவுப்பொருள் வழங்கல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொது விநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் சேவைகளை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம்மாதந்தோறும் நடத்தப்படுகிறது.
அதன்படி, பிப்ரவரி மாதத்துக்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் நாளை (பிப்.11) காலை 10 மணிமுதல் பிற்பகல் 1 மணிவரை நடைபெறவுள்ளது.
குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு, மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை,நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களைப் பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்றும் வழங்கப்படும்.
இதுதவிர, பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றைப் பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலகம் தொடர்புடைய பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இந்த சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.