தூத்துக்குடி: தூத்துக்குடி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் மு.பொன்னையா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஆண்டொன்றுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் ‘பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி' என்ற திட்டம் 2018-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் 3 தவணையாக (ரூ.2000 வீதம்) இந்த நிதி உதவி விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.
திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை 12 தவணைகள் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் வழங்கப்பட உள்ள 13-வது தவணை தொகையைப் பெறுவதற்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக் கணக்கு அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 3.17 லட்சம் விவசாயிகளும், தூத்துக்குடி மாவட்டத்தில் 6,815 விவசாயிகளும் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக் கணக்கு இல்லாமல் இருப்பதாக தெரியவந்துள்ளது.
அவர்கள் அனைவரும் அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கலாம். தபால்காரர் மற்றும் கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட்போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தின் மூலம், விவசாயிகள் தங்களின் ஆதார் மற்றும் மொபைல் எண்ணை மட்டும் பயன்படுத்தி இகேஒய்சி (விரல் ரேகை மூலம்) மூலம் ஒரு சில நிமிடங்களில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்க முடியும்.
இதற்காக மாவட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையுடன் இணைந்து கிராமங்களில் நடத்தப்படும் சிறப்பு முகாம்களை பயன்படுத்தி அல்லது அஞ்சலகங்கள் / தபால்காரர் / கிராம அஞ்சல் ஊழியரை அணுகி இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கி விவசாயிகள் பயன்பெறலாம்.