சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த்நேற்று விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டமானது, 1956-ல் தொடங்கி 2003-ம் ஆண்டு வரை நடைமுறையில் இருந்தது. இத்திட்டத்தை ரத்து செய்த அதிமுக அரசு, புதிய ஓய்வூதிய திட்டத்தைக் கொண்டு வந்தது.
மேற்கு வங்க அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தையே செயல்படுத்தி வருகிறது. தற்போது திரிபுரா, ராஜஸ்தான், சத்தீஸ்கர் அரசுகளும் புதிய ஓய்வூதிய திட்டத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டுள்ளன.
புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஓய்வூதியம், பணிக்கொடை, குடும்ப ஓய்வூதியம் என எந்த பயனும் இல்லை. இதை உணர்ந்து அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராடி வந்தனர்.
அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக, அத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, 2006 தேர்தலில் ஆட்சிப் பொறுப்பேற்றதும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம் என வாக்குறுதி அளித்தது.ஆனால், அந்த வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை. மீண்டும் அதே வாக்குறுதியை 2011, 2021 தேர்தல்களிலும் திமுக அளித்தது குறிப்பிடத்தக்கது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை வாக்கு வங்கியாக மட்டுமேபயன்படுத்தி தேர்தல் காலங்களில் வாக்குறுதி கொடுத்து ஏமாற்றுவது அழகல்ல. எனவே திமுக அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக கொண்டு வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.