திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி, கடந்த 1957-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் குளித்தலை தொகுதியில் வென்று முதல்முறையாக எம்எல்ஏ ஆனார். அதன்பிறகு போட்டியிட்ட அனைத்துத் தேர்தல்களிலும் வென்று சாதனை படைத்துள்ள அவர், தற்போது திருவாரூர் தொகுதி எம்எல்ஏவாக இருக்கிறார். கருணாநிதியின் 60 ஆண்டுகால சட்டப்பேரவை வைர விழாவை அவரது 94-வது பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி மிகச் சிறப்பாகக் கொண்ட திமுக ஏற்பாடுகளை செய்து வருகிறது.
இது தொடர்பாக நிருபர்களி டம் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நேற்று கூறியதாவது:
திமுக தலைவர் கருணாநிதியின் சட்டப்பேரவை வைர விழா மற்றும் அவரது 94-வது பிறந்த நாள் விழா, வரும் ஜூன் 3-ம் தேதி மாலை 5 மணிக்கு சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடக்க வுள்ளது. இதில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பிஹார் முதல்வர் நிதிஷ்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஜம்மு - காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, பிஹார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார், திரிணமூல் காங்கிரஸ் மாநிலங்களவை குழு தலைவர் டெரிக் ஓபராயன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி உள்ளிட்ட தேசிய தலைவர்கள், பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் பங் கேற்று உரையாற்ற உள்ளனர்.
கருணாநிதி பங்கேற்பாரா?
தற்போதைய சூழலில் கருணா நிதி இந்த விழாவில் பங்கேற்கும் வாய்ப்பு இல்லை. ஒருவேளை மருத்துவர்கள் அனுமதித்தால் அவர் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.
கருணாநிதி சட்டப்பேரவை வைர விழாவில் குடியரசுத் தலை வர் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பொது வேட்பாளரை அறிவிப்பது பற்றி எதுவும் பேசப்படாது. பொது வேட்பாளர் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி என்னிடம் தொலைபேசியில் பேசினார். மற்ற கட்சித் தலைவர்களிடமும் அவர் பேசியிருக்கிறார். அனைவரும் கலந்துபேசி நல்ல முடிவு எடுக் கப்படும். இந்த விழா அதற்காக நடத்தப்படவில்லை.
இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.
1977-ல் ஆட்சியை இழந்த திமுக, எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு 1989-ல் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. அந்த காலகட்டத்தில் காங்கிரஸில் இருந்து விலகி ஜனதா தளம் கட்சியை தொடங்கிய வி.பி.சிங்குடன் இணைந்து காங்கிரஸுக்கு மாற்றாக தேசிய முன்னணி என்ற அமைப்பை திமுக தலைவர் கருணாநிதி உரு வாக்கினார். அதன் தொடக்க விழா சென்னையில்தான் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து வி.பி.சிங் தலைமையிலான அமைச்சரவை யில் திமுக அங்கம் வகித்தது. முரசொலி மாறன் மத்திய அமைச்ச ரானார். அதன்பிறகு தேவகவுடா, ஐ.கே.குஜ்ரால், வாஜ்பாய், மன்மோகன் சிங் ஆகியோரது அமைச்சரவையிலும் திமுக அங் கம் வகித்தது.
இந்நிலையில், மீண்டும் தேசிய தலைவர்களை அழைத்து திமுக கூட்டம் நடத்துகிறது. பாஜகவுக்கு மாற்றாக காங்கிரஸ் - இடதுசாரி கட்சிகள் இணைந்து புதிய அணியை உருவாக்க வேண்டும் என குரல் வலுத்து வரும் நிலையில் இந்தக் கூட்டம் நடைபெறுவது முக்கியத்துவம் பெறுகிறது. அதை உறுதிப்படுத்துவதுபோல பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஸ்டாலின் அழைப்பு விடுக்கவில்லை.
குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்தவும், 2019 மக்களவைத் தேர் தலில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் - இடதுசாரிகள் அடங் கிய மாற்று அணி உருவாகவும் கருணாநிதியின் சட்டப்பேரவை வைர விழா உதவும் எனக் கூறப்படுகிறது.