சென்னை: தாட்கோ சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு, பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற பயிற்சிவழங்கப்பட உள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் சு.அமிர்தஜோதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில்,ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு பல்வேறு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
அதன் தொடர்ச்சியாக தற்போது பன்னாட்டு நிறுவனங்களில் எளிதில் வேலைவாய்ப்பு பெறும் வகையில், அஸ்பைரிங் மைண்ட்ஸ் கம்ப்யூட்டர் அடாப்டிவ் டெஸ்ட் (ஏஎம்சிஏடி) பயிற்சி வழங்கப்பட உள்ளது.
3 மாதம் பயிற்சி: இந்தப் பயிற்சியை பெற, அரசுமற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப் படிப்பில் இறுதியாண்டு படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான காலஅளவு 3 மாதங்களாகும். இப்பயிற்சிக்கான அனைத்து செலவும் தாட்கோவால் வழங்கப்படும்.
பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில், ஏஎம்சிஏடி தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். தேர்வில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இதன் மூலம் அவர்கள் பன்னாட்டுநிறுவனங்களில் எளிதில் வேலைவாய்ப்பு பெறலாம்.
பயிற்சியில் சேர விரும்பும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் தாட்கோ இணையதளமான www.tahdco.com-ல் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.