இங்கிலாந்தில் உள்ள வங்கியில் ரூ.27 லட்சம் மோசடி செய்த சென்னை இளைஞர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.சென்னை துரைப்பாக்கத்தில் அட்டால் என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கிலாந்து நாட்டின் தேசிய சேமிப்பு மற்றும் முதலீட்டு வங்கியின் கணக்குகளை இந்த நிறுவனம் கவனித்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்து வங்கியின் வாடிக்கையாளரான மவ்ரின் என்பவரின் கணக்கில் இருந்து ரூ.27 லட்சம் பணம் அவரது அனுமதியில்லாமல், இங்கிலாந்தில் வசிக்கும் மற்றொரு நபருக்கு பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக புகார் வந்தது.
இதைத் தொடர்ந்து அட்டால் நிறுவனம் நடத்திய விசாரணையில் அதே நிறுவனத்தில் பணிபுரியும் எழில்மாறன், ராகவகிரி ஆகியோர் ஆன்லைன் மூலம் ரகசிய தகவல்களை திருடி, மவ்ரினின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை இங்கிலாந்தில் வசிக்கும் தங்கள் நண்பரான பிரான்ஸிஸ் என்பவரின் வங்கி கணக்கிற்கு மாற்றியது தெரிந்தது.
இதுகுறித்து அட்டால் நிறுவனத்தின் பணியாளர் நலத்துறை தலைவர் சந்திரசேகர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இதைத்தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து எழில்மாறன், ராகவகிரி ஆகியோரை கைது செய்தனர்.