மதுரை: ரயில் விபத்தை தடுத்த பெண் ஊழியர்கள் 2 பேருக்கு மதுரை கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த் விருது வழங்கி பாராட்டினார்.
ரயில் பாதை சரியாக இருக்கிறதா என கண்காணிக்க பாதை பராமரிப்பு பணியாளர்கள் (கீமேன்) தினந்தோறும் ரயில் பாதையில் நடந்து சென்று ஆய்வு செய்வர். தண்டவாளத்துக்கும் சிலிப்பர் கட்டைகளுக்கும் இணைப்பாக உள்ள கிளிப்புகளை அடித்து சரி செய்வர்.
இதுபோன்று கீமேனாக பணியாற்றிய சிவகாசி ரயில் பாதை பராமரிப்புப் பணியாளர் சி.சுபா, கடந்த மாதம் ராஜபாளையம் - சங்கரன்கோவில் ரயில் நிலையங்கள் இடையே ரயில் பாதை இணைப்பு பற்ற வைப்பு பகுதியில் விரிசல் இருப்பதைப் பார்த்தார். உடனடியாக ரயில் பாதை பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு ராஜபாளையம், சங்கரன்கோவில் ரயில் நிலைய மேலாளர்களுக்கு தகவல் தெரிவித்தார்.
இதன் காரணமாக முன்னெச்சரிக்கையாக செங்கோட்டை - மயிலாடுதுறை ரயில் ராஜபாளையத்தில் நிறுத்திவைக்கப்பட்டது. பின்னர் தண்டவாளம் சீரமைக்கப்பட்டது. அதேபோல், மணப்பாறை - கொளத்தூர் ரயில் நிலையங்கள் இடையே கீமேனாக பணியாற்றிய கே.வளர்மதி, ரயில் பாதையில் பற்ற வைப்பு பகுதியில் விரிசலை கண்டுபிடித்து உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தார்.
மதுரையில் நடைபெற்ற ரயில்வே பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தில் சி.சுபா, கே.வளர்மதி ஆகியோருக்கு ரயில்வே கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த் ரொக்கப் பரிசு வழங்கி பாராட்டினார். முதுநிலைக் கோட்ட பாதுகாப்பு அதிகாரி முகைதீன் பிச்சை, முது நிலை கோட்டப் பொறியாளர்கள் ஆர்.நாராயணன், பிரவீனா, ஹிருத யேஷ் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.