தமிழகம்

வயது பிரச்சினையால் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்ட மாணவர்: கருணை அடிப்படையில் வழங்க முதல்வருக்கு வேண்டுகோள்

கே.சுரேஷ்

17 வயது நிறைவடைவதற்கு 26 நாட்கள் குறைந்ததால் மருத்து வம் படிக்கும் வாய்ப்பு மறுக் கப்பட்டுள்ள மாணவருக்கு கருணை அடிப்படையில் மருத்துவக் கல்லூரி யில் பயில வாய்ப்பளிக்குமாறு முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கொத்தமங்கலம் ஊராட்சி, அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த தங்கராஜ்- இந்துராணி தம்பதி மகன் ராமானுஜம், மகள் ரமணி.

கொத்தமங்கலம் அரசு ஆண் கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த ராமானுஜம், எஸ்எஸ்எல்சி வகுப்பில் 452 மதிப்பெண் பெற்றார். பின்னர், அரசின் உதவியுடன் தனி யார் பள்ளியில் பிளஸ் 2 படித்த இவர் 1101 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அதில் உயிரியல் 194, இயற்பியல் 196, வேதியியல் 194 என மதிப்பெண்கள் பெற்றுள்ள இவரின் மருத்துவக் கல்விக்கான கட்- ஆப் மதிப்பெண் 194.5.

ராமானுஜம் ஆதிதிராவிடர் வகுப் பைச் சேர்ந்தவர் என்பதால் இந்த கட்-ஆப் மதிப்பெண்ணுடன் மருத்துவ ராகிவிடலாம் என்ற கனவில் எம்பிபிஎஸ் படிப்புக்கு விண்ணப் பித்து காத்திருந்த இவருக்கு விண்ணப்பம் பெற்றுக்கொண்ட தற்கான தகவல், ரேண்டம் எண் இவையெல்லாம் கிடைத்தன.

பின்னர், எம்பிபிஎஸ் முதல் கட்ட கலந்தாய்வுக்கான கட்-ஆப் மதிப்பெண் இணையதளத்தில் வெளியிடப்பட்டதில் ஆதிதிராவிடர் மாணவர்களுக்கான கட்-ஆப் மதிப்பெண்படி இவருக்கு மருத்து வராகும் வாய்ப்பு உறுதியாகி விட்டதால் எதிர்பார்ப்போடு குடும்பத்தினர் இருந்துள்ளனர்.

இந்நிலையில், சென்னையில் கடந்த மாதம் 18-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி முடி வடைந்த கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கான அழைப்புக் கடிதம் ராமானுஜத்துக்கு கிடைக்க வில்லை. இதுகுறித்து மருத்துவக் கல்லூரிக்கு மாணவர்களை தேர்வு செய்யும் கமிட்டி தரப்பில் விசாரித்த போது, கட்-ஆப் மதிப்பெண் இருந்தாலும் 31.12.2014 அன்று விண்ணப்பதாரர் 17 வயது நிறை வடைந்தவராக இருக்க வேண்டு மென்பது விதி. ஆனால், 27.01.1998ல் பிறந்துள்ள ராமானுஜத்துக்கு 17 வயது நிறைவடைய 26 நாள்கள் குறைவாக இருப்பதால் அவருக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டிருக்காது என்ற தகவல் தெரியவந்துள்ளது. ஆனால், இதுகுறித்த தகவ லைக்கூட மருத்துவக் கல்வி நிர் வாகம் ராமானுஜத்துக்கு அனுப்பி வைக்கவில்லை.

எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு எழுதியபோது எழாத வயது பிரச்சினை, மருத்து வப் படிப்பில் சேரும் நிலையில் எழுந்திருப்பது ராமானுஜத்தையும் அவரது குடும்பத்தினரையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து ராமானுஜம் கூறும்போது, “எனது பள்ளிப் படிப்புக் காலத்தில் யாரும் என்னிடம் வயது குறைவாக இருப்பது பற்றி கேட்கவில்லை.

உரிய வயதுக்கு 26 நாட்கள் குறைவதாகக் கூறி, எனக்கு கல்வித் தகுதி இருந்தும் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக முதல்வர் இது குறித்து கருணை காட்டி எனக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்” என்றார்.

எஸ்எஸ்எல்சி தேர்வுக்கு 15 வயதும் பிளஸ் 2 தேர்வுக்கு 17 வயதும் நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும் 6 மாதம் வயது தளர்வு அரசால் வழங்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் மாணவர் ராமானுஜத்துக்கு ஒரு மாதம்கூட இல்லாத நிலையில், 26 நாட்களை ஒரு குறையாக எடுத்துக்கொள்ளாமல் மருத்துவர் படிப்புக்கு அனுமதிக்க வேண்டும் என ஆசிரியர் சங்கத்தினர் கூறுகின்றனர்.

SCROLL FOR NEXT