தமிழகம்

மாடுகள் விற்கத் தடைக்கு எதிராக ஜூன் 1-ல் ஆர்ப்பாட்டம் வீரமணி அறிவிப்பு

செய்திப்பிரிவு

மாட்டிறைச்சி உணவுக்கு தடை விதித்த மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து ஜூன் 1-ம் தேதி சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’மாட்டைக் கடித்து, ஆட்டைக் கடித்து, கடைசியில் மனிதனை கடித்தது என்ற ஒரு பழமொழி உண்டு. ஆனால் இப்பொழுது சற்று வித்தியாசப்படுத்தி மனிதனை கடித்து மாட்டைக் காப்பாற்றும் தலைகீழ் நிலைக்கு மத்தியில் உள்ள பிஜேபி தலைமையிலான அரசு நாட்டைக் கொண்டு செல்கிறது.

இந்துத்துவா கொள்கைத் திணிப்பு

மிருகவதை தடுப்பு என்ற பெயரால் மாட்டிறைச்சி உண்ணுவதை தடைசெய்யும் ஒரு சட்டத்தையும் மத்திய பிஜேபி அரசு கொண்டுவந்துள்ளது. நாடு முழுவதும் கால்நடை சந்தைகளில் பசு, காளை, எருமை, ஒட்டகங்களை இறைச்சிக்காக கொல்லுவதற்கு விற்கக்கூடாது. விவசாயிகள் மட்டும்தான் சந்தைகளில் கால்நடைகளை விற்கமுடியும்; சந்தைகளுக்கு கால்நடைகளைக் கொண்டுவருபவர்கள் அவற்றை இறைச்சிக்காக விற்கவில்லை என்பதற்கான உறுதிமொழி சான்றை எழுத்துப்பூர்வமாக அளிக்கவேண்டும். கால்நடைத்துறை அதிகாரிகளிடம் சான்றிதழ் பெறவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம் மத்தியில் உள்ள பிஜேபி அரசு தனது இந்துத்துவா கொள்கையைத் தீவிரமாக நடைமுறைப்படுத்த முற்படுவது இந்திய அரசமைப்புச்சட்டத்திற்கு முற்றிலும் விரோத செயல்பாடேயாகும்.

Cruelty to animals Act என்பது இந்திய அரசியல் சட்டத்தில் 7-வது அட்டவணையில் பொதுப்பட்டியலில் 17 ஆவது அம்சமாக அரசியல் சட்ட கர்த்தாக்களால் வரையறுக்கப்பட்டுள்ளது. இதன்படி மாநில அரசுகளுக்கும் இதுபற்றி முடிவெடுக்க, சட்டம் இயற்ற உரிமையுள்ளது. மாநில ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது இந்த அடிப்படையில்தான் என்பதும் இங்கு சுட்டிகாட்ட தகுந்ததாகும்.

அரசமைப்பு சட்டவிரோதம்

மாட்டிறைச்சி உண்ணும் பழக்கம் உள்ள இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள், தாழ்த்தப்பட்டோர், இந்துக்களில் பெரும்பான்மையோர், விளையாட்டு, போட்டிகளில் ஈடுபடுவோர், ராணுவத் துறையினர் என பலருக்கும் மாட்டுக்கறி உணவு என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். இத்தகைய உணவு பழக்கத்தை - அடிப்படை ஜீவாதார உரிமையை மத்திய அரசின் புதிய சட்டம் மறுப்பதோடு அல்லாமல் அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமை தத்துவத்திற்கே விரோதமல்லவா!

விற்பனை செய்யும்முன் அதற்குரிய அதிகாரிகளிடம் இது இறைச்சிக்காக விற்கப்படவில்லை என்று சான்றிதழ் ஆதாரம் பெறவேண்டுமென்றால், சந்தைக்கு வரும் விவசாயிகளுக்கு இது எவ்வகையில் நடைமுறை சாத்தியம்? இதில் லஞ்சம், ஊழல் நுழைந்துவிடாதா?

தமிழ்நாடு, கேரளா, பிஜேபி ஆளும் கோவா, குறிப்பாக வடகிழக்கு மாகாணங்களில் மாட்டுக்கறி மிகவும் முக்கியமான அன்றாட உணவல்லவா!

மத்திய அரசின் மக்கள் விரோத, அடிப்படை மனித உரிமை விரோத இத்தகைய செயலைக் கண்டித்து 01.06.2017 அன்று காலை 11.00 மணிக்கு சென்னையில் ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் அறவழியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

30.5.2017 மாலை சென்னை பெரியார் திடலில் கண்டன பொதுக் கூட்டம் நடைபெறும். மதச்சார்பின்மையில் நம்பிக்கை உள்ள, மனித உரிமையில் ஆர்வமுள்ள அனைத்துத் தரப்பினரும் ஓர் அணியில் இணைந்து நின்று மத்திய அரசின் காட்டு தர்பாரை முறியடிக்க வாரீர், வாரீர் என்று அழைக்கிறோம்’’ என்று கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT