விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக சி .பழனி பொறுப்பேற்றுக்கொண்டார். 
தமிழகம்

கல்வி, சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்; விழுப்புரம் மாவட்ட புதிய ஆட்சியர் சி.பழனி உறுதி

எஸ். நீலவண்ணன்

விழுப்புரம்: விழுப்புரம் ஆட்சியராக பணியாற்றிவந்த மோகன், செய்திமக்கள் தொடர்புத்துறை இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக விருதாச்சலம் உதவி ஆட்சியராக பணியாற்றி வந்த சி.பழனி,விழுப்புரத்திற்கு நியமிக்கப்பட்டார்.

இன்று அவர் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது, “ஆட்சியராக பணியாற்றிட வாய்ப்பு வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விழுப்புரம் மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் சுகாதாரமும், கல்வி வளர்ச்சியில் முக்கியத்துவம் கொடுத்து நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். விளிம்புநிலை, கீழ்தட்டுமக்கள் வளர்ச்சிக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இதற்காக தமிழ்நாடு அரசு பலதிட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மக்களிடையே சென்றடைய வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் களப்பணியாற்றி வருகின்றனர். இவர்களை கண்காணித்து திட்டங்கள் சென்றடைவதை உறுதி செய்வது ஆட்சியரின் கடமை.

அதற்காக முழுநேரமும் மக்களுக்காக செலவு செய்வேன். பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை தொடர்புகொள்ளலாம். 94441 38000 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொண்டும் குறைகள், புகார்களை தெரிவிக்கலாம். கூட்டத்தில் அழைப்பை ஏற்கமுடியாத பட்சத்தில் வாட்ஸ்அப், எஸ்எம்எஸ் மூலமும் தெரிவிக்கலாம். வெளிப்படைத் தன்மையோடு மாவட்ட நிர்வாகம் செயல்படும்” என்றார்.

அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, திண்டிவனம் உதவி ஆட்சியர் ரவி தேஜா கட்டா, துணை ஆட்சியர் லாவண்யா, கோட்டாட்சியர் ரவிசந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ஆட்சியர் சி. பழனி தர்மபுரி மாவட்டம் அரூரைச் சேர்ந்தவர். 2 மகள்கள் உள்ளனர். ஒருவர் மருத்துவப் படிப்பும், மற்றொருவர் பி.காம் படித்து வருகிறார். கடந்த 24 ஆண்டுக் வணிகவரித்துறையில் பணியாற்றிவந்த அவர் பதவி உயர்வு பெற்று விருத்தாசலத்தில் 2 ஆண்டுகளாக உதவி ஆட்சியராக பணியாற்றி தற்போது பதவி உயர்வில் விழுப்புரம் ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT