ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடத்தை விதிமுறைகளால் வர்த்தகம் பாதிக்கப்படாமல் இருக்க, கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தையில் ரசீது வழங்கப்படுகிறது.
ஈரோடு கருங்கல்பாளையத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை நடைபெறும் மாட்டுச் சந்தையில், ரூ.3 கோடி வரை வர்த்தகம் நடக்கிறது. மாட்டுச் சந்தை நடைபெறும் கருங்கல்பாளையம் பகுதி, ஈரோடு கிழக்கு தொகுதிக்குள் இருப்பதால் அங்கு தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன.
இதையடுத்து, ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்களின்றி பணம் கொண்டு செல்லப்படும்போது அவற்றை பறிமுதல் செய்ய வாய்ப்புள்ளது. இதனால் வியாபாரிகளும், விவசாயிகளும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதைத் தவிர்க்கும் வகையில், மாடுகளை விற்று பணத்தை எடுத்துச் செல்பவர்களுக்கு, பெயர், முகவரி, ஆதார் எண்ணுடன் ரசீது வழங்கப்பட்டு வருகிறது.
அதேபோல மாடுகளை வாங்க வருவோர் பணம் எடுக்கும் வகையில், நடமாடும் ஏடிஎம் மையங்களை சந்தை வளாகத்தில் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று நடந்த சந்தையில், 450 பசு, 200 எருமை, 50 வளர்ப்பு கன்றுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இவற்றில் 80 சதவீதம் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.