தமிழகம்

ஐஐடி மாணவர் சூரஜ் மீது வழக்கு தொடுத்திருப்பது கண்டிக்கத்தக்கது: ஜி.ராமகிருஷ்ணன்

செய்திப்பிரிவு

மாட்டிறைச்சி திருவிழாவில் காயமடைந்த சூரஜ் உள்ளிட்ட மாணவர்கள் மீது தமிழக காவல்துறை வழக்கு தொடுத்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்யக் கூடாது என்ற மத்திய பாஜக கூட்டணி அரசின் உத்தரவுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

சென்னை ஐஐடியில் மோடி அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பெரியார் அம்பேத்கர் வாசகர் வட்டத்தைச் சார்ந்த மாணவர்கள் மாட்டிறைச்சி திருவிழா நடத்தியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஆர்.எஸ்.எஸ். ஆதரவு மாணவர்கள் சூரஜ் என்ற மாணவர் மீது கொடூரமான தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த சூரஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதல் வன்மையான கண்டனத்திற்குரியது.

தாக்குதல் தொடுத்த மதவெறி அமைப்பு சார்ந்தவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக, தமிழக காவல்துறை காயமடைந்த சூரஜ் உள்ளிட்ட மாணவர்கள் மீதும் வழக்கு தொடுத்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இந்நிலையில் உணவு உரிமையை வலியுறுத்தியும் ஐஐடியில் நடந்த தாக்குதலை கண்டித்தும் மாணவர், இளைஞர் அமைப்புகளைச் சார்ந்தவர்கள் ஐஐடி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இவர்களை காவல்துறையினர் கடுமையாக தாக்கி கைது செய்துள்ளனர், பெண் ஒருவரின் கைகளை முறிக்கும் அளவுக்கு போலீஸார் நடத்தியுள்ள தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கண்டிக்கிறது.

உணவு உரிமையை வலியுறுத்தி போராட்டம் நடத்துபவர்களை கைது செய்வது, வழக்கு தொடுப்பது போன்ற நடவடிக்கைகளை தமிழக காவல்துறை கைவிட வேண்டுமெனவும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் கையை முறுக்கிய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT