நத்தம்: தைப்பூசத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் இருந்து பழநிக்கு பாதயாத்திரையாக புறப்பட்ட நகரத்தார் சமூகத்தினர் நேற்று திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வந்தடைந்தனர்.
சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை, கண்டனூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த நகரத்தார் கடந்த 300 ஆண்டுகளாகப் பாரம்பரியமிக்க வைரவேல், காவடிகளுடன் பழநிக்கு பாதயாத்திரையாகச் சென்று வழிபடுவது வழக்கம்.
இவ்வாண்டு தைப்பூச விழாவை முன்னிட்டு நகரத்தார் காவடி ஜன.29-ல் குன்றக்குடியில் இருந்து பழநிக்கு வைரவேல், 291 காவடிகளுடன் பாதயாத்திரையாகப் புறப்பட்டனர். இவர்கள் நேற்று நத்தம் வந்தடைந்தனர்.
நேற்று காலை நத்தம் வாணியர் பஜனை மடத்தில் தங்கிய நகரத்தார், காலையில் சிறப்பு பூஜையில் ஈடுபட்டனர். தொடர்ந்து பக்தர்கள் முன்னிலையில் காவடிச் சிந்து பாடப்பட்டு காவடிகளுடன் பழநி நோக்கிப் புறப்பட்டனர்.பிப்.4-ம் தேதி தைப்பூசத்தன்று மலைக்கோயிலைச் சென்றடையும் இவர்கள், சுவாமியை வழிபட்ட பின்னர் ஒரு நாள் பழநியில் தங்கிவிட்டு மீண்டும் பாதயாத்திரையாகவே ஊர் திரும்புவர்.