சென்னை: தனது புகைப்படத்தை சித்தரித்து வெளியிட்ட பாஜக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையருக்கு ஆன்லைன் வழியாக நடிகை காயத்ரி ரகுராம் புகார் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜகவில் வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவராக இருந்தவர் நடிகை காயத்ரி ரகுராம். மாநிலத் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பின், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக பேசியும், சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டும் வருகிறார்.
இந்நிலையில், சென்னை காவல் ஆணையருக்கு ஆன்லைன் வழியாக காயத்ரி ரகுராம் நேற்று இரவு புகார் ஒன்றை அனுப்பி இருந்தார். அதில், ‘ராணிப்பேட்டை மாவட்ட பாஜக நிர்வாகி பாபு, எனது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.