கும்பகோணம்: கும்பகோணம் வட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள முதியோர், விதவை, முதிர்கன்னிகள், கணவரால் கைவிடப்பட்டோர் உள்ளிட்டோருக்கு மாதந்தோறும் ரூ.1,000, மாற்றுத் திறனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,500 என தமிழக அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கும்பகோணம் வட்டத்தில் உள்ள பெரும்பாலானோருக்கு கடந்த 6 மாதங்களுக்கு மேலாக உதவித்தொகை வரவில்லை என கூறப்படுகிறது. இதனால், பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ள அவர்கள், உதவித்தொகை கேட்டு தினந்தோறும் அரசு அலுவலகங்களுக்கு அலைந்து வருகின்றனர்.
இதுகுறித்து சமூகப் பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் வே.பிரேமாவதி கூறியபோது, “கும்பகோணம் வட்டத்தில் 13,999 பேர் தமிழக அரசின் உதவித்தொகை பெற்று வருகின்றனர். இதில், 2,215 பேருக்கு கடந்த 6 மாதங்களாக உதவித்தொகை வரவில்லை. இதனால், அவர்களுக்கு வழங்கப்படாமல் உள்ளது.
இதையடுத்து, விடுபட்டுள்ள இவர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தமிழக அரசிடம் கேட்டுள்ளோம். இன்னும் 1 வாரம் முதல் 1 மாதத்துக்குள் அந்தத் தொகை வந்ததும், விடுபட்ட அனைவருக்கும் உதவித்தொகை வழங்கப்படும்” என்றார்.