ஈரோடு: வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பயணித்த ஹெலிகாப்டர், பனி மூட்டம்காரணமாக கடம்பூர் அருகே மலைக் கிராமத்தில் தரையிறக்கப் பட்டது.
ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தை அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் உகினியம் கிராமம் உள்ளது. இங்குள்ள பள்ளி மைதானத்தில் நேற்று காலை ஹெலிகாப்டர் ஒன்று தரையிறங்கியது. கடம்பூர் போலீஸார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதில், வாழும் கலை அமைப்பு நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மற்றும் அவருடன் மூன்று பேர் ஹெலிகாப்டரில் பயணித்ததும், பெங்களூருவில் இருந்து திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் நடக்கும் கோயில் திருவிழாவுக்கு ஹெலிகாப்டரில் சென்றபோது, அதிக பனி மூட்டம் இருந்ததால் தொடர்ந்து பயணிக்க முடியாமல், உகினியம் கிராமத்தில் ஹெலிகாப்டரை பைலட் தரையிறக்கியதும் தெரியவந்தது.
சிறிது நேரத்துக்குப் பின்பு பனிமூட்டம் விலகி, வானிலை சரியான நிலையில் ஹெலிகாப்டர் புறப்பட்டுச் சென்றது.