தமிழகம்

இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்க பாஜக முயற்சி - மதிமுக பொதுச்செயலர் வைகோ குற்றச்சாட்டு

என். சன்னாசி

மதுரை: மதுரை ஓபுளாபடித்துறை பகுதியில் மதிமுக சார்பில், மொழிப்போர் தியாகிகள், வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் நாளை ( ஜன., 25) நடக்கிறது. இதில் பங்கேற்க கட்சியின் பொதுச்செயலர் வைகோ இன்று மதுரை வந்தார்.

விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: நாட்டின் வரலாற்றிலேயே இவ்வளவு நாசகார சக்தி இதுவரை வந்ததில்லை எனக் கூறும் வகையில் இந்துத்துவா தத்துவத்தையும் சனாதன தர்மத்தை வைத்து ஒரே நாடு, மொழி, மதம், கலாச்சாரம் என நடைமுறைக்கு ஒத்துவராததும், ஒருபோதும் நடக்க கூடாததுமான ஒரு விஷத்தை பாஜக கக்கி கொண்டிருக்கின்றது. இதற்குரிய சரியான பதிலை தமிழ்நாடு கொடுக்கும். இங்கு அதற்கான இடமில்லை என வரலாறு நிரூபிக்கும்.

பாஜகவை தமிழ்நாடு ஏற்காது. சனாதன தர்மம், இந்துத்துவாவையும் ஏற்றுக்கொள்ளாது. இந்துத்துவா தத்துவ அடிப்படையில் நாட்டில் ஒருமைப்பாட்டை கொண்டு வரப்போகிறோம் என அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். இது, கோல்வால்கர் ஒரு காலத்தில் சொன்னது. சனாதன தர்மம், இந்துத்துவா அதற்கு பிறகு இந்தி, சமஸ்கிருதம் இதுதான் திட்டம். இந்த நோக்கம் நடக்காது. இதுபற்றி நாளைய கூட்டத்தில் விரிவாக பேசுவேன். இவ்வாறு அவர் கூறினார்
.
முன்னதாக விமான நிலையத்தில் அவரை பூமிநாதன் எம்எல்ஏ, தொழிற்சங்க நிர்வாகி மகப்பூஜான் உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்றனர்.

SCROLL FOR NEXT