கோப்புப்படம் 
தமிழகம்

அம்மா சிமென்ட் விநியோக திட்ட முறைகேடு: விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: அம்மா சிமென்ட் விநியோகத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பான விசாரணை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், பாஜக நிர்வாகியும், கொலுமங்குழி பஞ்சாயத்து வார்டு உறுப்பினருமான யோகேஸ்வரன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில்,
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தாலுகாவில் உள்ள குண்டடம் பஞ்சாயத்து யூனியனில் அம்மா சிமென்ட் விநியோகத் திட்டத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரிக்க உத்தரவிட வேண்டும்.

அம்மா சிமெண்ட் கிட்டங்கியில் ஆவணங்களின் படி இருக்க வேண்டிய சிமென்ட் மூட்டைகளை விட குறைவான எண்ணிக்கையில் இருப்பதாக புகார் அளித்தேன். அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக தணிக்கை பிரிவு உதவி இயக்குனர் மேற்கொண்ட ஆய்வில் இது உறுதி செய்யப்பட்டது. இந்த ஆய்வுக்கு பின், பயனாளிகள் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து சிமென்ட் மூட்டைகளுக்கான தொகையை தனியார் ஒப்பந்ததாரர் நிறுவனம் செலுத்தியுள்ளது.

இந்த வகையில் 4,217 சிமென்ட் மூட்டைகள் விநியோகத்தில் முறைகேடுகள் நடந்துள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக, அம்மா சிமென்ட் கிட்டங்கியை நிர்வகிக்கும் ஒப்பந்தப் பணியாளர்களுக்கு எதிராக மட்டும் குண்டடம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த முறைகேட்டில் தொடர்புடைய அதிகாரிகளுக்கு எதிராக எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. எனவே, இந்த முறைகேடு வழக்கை விசாரிக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும். முறைகேடுகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், "இந்த விவகாரம் குறித்து, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குண்டடம் வட்டார வளர்ச்சி அதிகாரி உள்பட இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணைக்கு பிறகே சம்பந்தப்பட்ட மற்ற அதிகாரிகள் வழக்கில் சேர்க்கப்படுவர்" என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அம்மா சிமென்ட் விநியோகத் திட்டத்தில் நடந்த முறைகேடு தொடர்பான விசாரணை குறித்து, மூன்று வாரங்களில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

SCROLL FOR NEXT