தேனி: எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது கனவை நிறைவேற்ற தனி வழியில் செயல்பட்டு இலக்கை அடைய உறுதி ஏற்பதாக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான பழனிசாமி தெரிவித்தார்.
அதிமுக நிர்வாகிகள் இல்ல விழாவில் கலந்துகொள்ள முன்னாள் முதல்வர் பழனிசாமி நேற்று தேனி மாவட்டம் கம்பம் வந்திருந்தார். முன்னதாக, தேனி அருகே அன்னஞ்சி விலக்கில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது அவர் பேசியதாவது: எனக்கு வழங்கப்பட்ட இந்த எழுச்சியான வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. ஏழைகள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்று மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் கனவு கண்டனர். அவர்களது கனவை நிறைவேற்ற பாடுபட வேண்டும். இதற்காக நாம் தனி வழி என்ற பாணியில் செயல்பட்டு இலக்கை அடைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
அப்போது ஜெயலலிதா பேரவை சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், வீரவாளை பழனிசாமிக்கு வழங்கினார்.
பின்னர் திருமண விழாவில் பங்கேற்று பழனிசாமி பேசுகையில், விட்டுக் கொடுத்து வாழ்ந்தால்தான் இல்லறம் சிறக்கும். சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதுதான் திருமணம். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதன் மூலம் வாழ்வு வளம் பெறும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ, செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், கே.சி. கருப்பணன், ராஜேந்திரபாலாஜி, முன்னாள் எம்ஏல்ஏ ராஜன்செல்லப்பா, அமைப்பு செயலாளர் எஸ்டிகே.ஜக்கையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.