தமிழகம்

திரு.வி.க. நகர் மண்டலத்தில் ரூ.6 கோடியில் சமுதாய நலக்கூடம் திறப்பு: 9 ஜோடிகளுக்கு திருமணம் நடத்திவைத்தார் அமைச்சர் உதயநிதி

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு 78-க்கு உட்பட்ட சச்சிதானந்தம் தெருவில், மாநிலங்களவை உறுப்பினராக கனிமொழி இருந்தபோது அவரது தொகுதி மேம்பாட்டு நிதி, எழும்பூர் தொகுதி முன்னாள் உறுப்பினர் கே.எஸ்.ரவிச்சந்திரன் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் மூலதன நிதியின் கீழ் ரூ.6.02 கோடியில் அறிஞர் அண்ணா மாளிகை என்ற பெயரில் சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டது.

இதை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். தொடர்ந்து, 9 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்திவைத்து, சீர்வரிசைப் பொருட்களை வழங்கி வாழ்த்தினார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா, எம்எல்ஏக்கள் இ.பரந்தாமன், அ.வெற்றி அழகன், ஜோசப் சாமுவேல், மாநகராட்சி மத்திய மண்டல துணை ஆணையர் ஷேக் அப்துல் ரஹ்மான், பொது சுகாதார குழுத் தலைவர் கோ.சாந்தகுமாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT