தமிழகம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 22 மீனவர்களை மீட்க நடவடிக்கை: பிரதமருக்கு முதல்வர் ஓபிஎஸ் கடிதம்

செய்திப்பிரிவு

இலங்கை கடற்படையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 22 பேர் மற்றும் 109 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய் யப்பட்டுள்ள சம்பவத்தை தங்கள் கவனத்துக்கு கொண்டுவருகிறேன். புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடி தளத்தில் இருந்து 2 இயந்திரப் படகுகளில் 7 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்களை இலங்கை கடற்படையினர் 20-ம் தேதி (நேற்று) அதிகாலை கைது செய்து, படகுகளுடன் இலங்கை கரைநகருக்கு கொண்டுசென்று, சிறையில் அடைத்துள்ளனர்.

இந்திய - இலங்கை மீனவர்கள், அமைச்சர்கள் அளவில் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, மீனவர்கள் கைது தொடர்பாக பேசப்பட்டுள்ளது. ஆனாலும், துரதிர்ஷ்டவசமாக, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுகின்றனர்.

தமிழக கடலோர மாவட்ட மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத் துக்காக பாக் நீரிணை பகுதியில் பாரம்பரிய மீன்பிடி உரிமையைக் கொண்டுள்ளனர். அப்பாவியான அவர்களை அச்சுறுத்தும் வகையில், இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், அவர்களைத் தாக்குவதும் தொடர்கிறது.

கச்சத்தீவை மீட்பது மற்றும் அதில் தமிழக மீனவர்களுக்கு உள்ள உரிமையை பாதுகாப்பதன் மூலம் இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியும். கச்சத்தீவு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருப்பதால், இந்தியா - இலங்கை கடல் எல்லை விவகாரத்தை முடிந்துவிட்ட ஒன்றாக கருத முடியாது.

தமிழக மீனவர்களின் பாரம் பரிய மீன்பிடி உரிமை, அவர்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், இதுபோன்ற நட வடிக்கைகளை திரும்ப பெற வேண்டும் என்ற கருத்தை தெளிவாக, குழப்பமின்றி இலங்கை தரப்பிடம் மத்திய அரசு தெரிவிக்க வேண்டும்.

மேலும், தற்போது வரை 109 மீன்பிடி படகுகள் இலங்கை வசம் உள்ளன. இதுவரை அவை விடுவிக் கப்படவில்லை. இலங்கை அரசு படகுகளை தொடர்ந்து விடுவிக் காமல் இருப்பது, தமிழக மீனவர் களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற் படுத்துகிறது. எனவே, தாங்கள் இதில் தலையிட்டு, இந்த விஷ யத்தை இலங்கை அரசுக்கு தெரி வித்து 22 மீனவர்கள் மற்றும் 109 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுத் துறைக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT