தமிழகம்

துறைமுகம்- மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்தை விரைந்து செயல்படுத்துக: வாசன்

செய்திப்பிரிவு

துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''2006 ஆம் ஆண்டு மத்திய அரசு தமிழகத்தில் சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரை 18.3 கிலோ மீட்டர் தூரம் வரை 4 வழி பறக்கும் சாலை திட்டத்திற்கு அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டன. மத்திய அரசு இந்த திட்டத்திற்காக தமிழக அரசுக்கு நிதி உதவி அளித்தது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கலாம், சென்னை துறைமுகத்துக்கு வரும் சரக்குகளை எளிதில் கையாளலாம்.

ஆனால் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டு, பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் 2012 ல் தமிழக அரசின் பொதுப்பணித்துறை இத்திட்டத்திற்கு தடை விதித்தது. இத்திட்டம் தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

2009 முதல் 2016 வரை இத்திட்டப்பணிகள் நடைபெறாமல், முடக்கப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் கூடுதலானது, சென்னை துறைமுகத்துக்கு கிடைக்க வேண்டிய வருவாய் அருகில் உள்ள மாநிலமான ஆந்திராவுக்கு கிடைத்தது, விபத்துகள் அதிகமாக நடைபெற்றது. மேலும் மதுரவாயல் வழியாக துறைமுகத்துக்கு சரக்குகளை ஏற்றிச் செல்லும் லாரிகள் போக்குவரத்தில் நெரிசல் ஏற்பட்டு, பொது மக்கள் பாதிக்கப்பட்டு, துறைமுகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி தடைப்பட்டது.

இத்திட்டப் பணிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும், விரைந்து முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வர வேண்டும் என்பதற்காக 2009 முதல் 2014 வரை பல்வேறு கட்டங்களில் மத்திய, மாநில அரசு அதிகாரிகளுக்கு இடையே தொடர்ந்து பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் சுமுகத் தீர்வு ஏற்படாததால் இத்திட்டப் பணிகள் தொடர்ந்து நடைபெறாமல் நிலுவையில் இருக்கிறது. இத்திட்டத்தினை நிறைவேற்ற வேண்டும் என்பதே சென்னை வாழ் மக்கள் மற்றும் துறைமுகப் பயன்பாட்டாளர்களின் ஒட்டு மொத்த எதிர்பார்ப்பாகும்.

மேலும் இத்திட்டம் நிறைவேறும் பகுதிகளில் உள்ள நீர்நிலைப் பகுதிகள் மற்றும் கூவம் கரையோரப் பகுதி வாழ் மக்கள் பாதிக்கப்படாத வகையில் மாற்று ஏற்பாடு செய்து இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது.

தற்போது தமிழக அரசு இத்திட்டத்தில் மாற்றங்களை செய்து மத்திய அரசுக்கு பரிந்துரைத்த இந்த முக்கிய முடிவை காலம் தாழ்ந்து எடுத்திருந்தாலும் மக்கள் நலன், பொது நலன், துறைமுகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி போன்றவற்றை கவனத்தில் கொண்டு இத்திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் விரைந்து செயல்படுத்த வேண்டும்'' என்று வாசன் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT