கொடைக்கானல் நகரில் புல்வெளிகளே தெரியாத அளவு படர்ந்துள்ள பனித் திவலைகள். 
தமிழகம்

உறை பனியால் உறைந்த கொடைக்கானல்

செய்திப்பிரிவு

கொடைக்கானல்: கொடைக்கானலில் வழக்கமாக டிசம்பர் முதல் பிப்ரவரி வரை உறை பனிக் காலமாக இருக்கும். இந்தமுறை கடந்த நவம்பர் மாதத்திலேயே உறை பனிக் காலம் தொடங்கிவிட்டது. வழக்கமாக நவம்பர், டிசம்பரில் குளிரின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும். ஆனால், கடந்த சில நாட்களாக கொடைக்கானல் மலைப்பகுதியில் அதிகரித்து வரும் உறை பனியால் கடும் குளிர் வாட்டி வருகிறது.

பிற்பகலில் தொடங்கி மறுநாள் அதிகாலை வரை நீடிக்கும் பனியால் குளிர்ந்த காற்று வீசுகிறது. இரவு நேரங்களில் புல் வெளிகள், மைதானங்களில் வெள்ளை கம்பளம் விரித்தாற்போல் உறை பனி படர்ந்து காணப்படுகிறது. சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களும் உறை பனிக்கு தப்பவில்லை. அதிகளவில் பனிமூட்டம் நிலவுவதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். உறை பனியால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தோட்டக்கலை பயிர்களையும் உறை பனி விட்டு வைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இங்கு சுற்றுலா வந்துள்ள வெளிநாட்டினர் இந்த கால நிலையை அனுபவிக்கின்றனர். மற்றபடி வெளி மாவட்ட பயணிகள் வருகை குறைவாகவே உள்ளது. நகரில் வாட்டி எடுக்கும் குளிரால் ஸ்வெட்டர், குல்லா உள்ளிட்ட ஆயத்த ஆடைகளின் விற்பனை அதிகரித்துள்ளது.

SCROLL FOR NEXT