மெரினாவில் காணும் பொங்கல் கொண்டாட்டம் 
தமிழகம்

காணும் பொங்கல்: சென்னை கடற்கரைகளில் 235 டன் குப்பைகள் அகற்றம்

செய்திப்பிரிவு

சென்னை: காணும் பொங்கல் கொண்டாட்டத்திற்குப் பின் சென்னை கடற்கரைகளில் 235 டன் குப்பை அகற்றப்பட்டுள்ளது.

சென்னையில் காணும் பொங்கலை முன்னிட்டு, மக்கள் அதிகம் கூடும் கடற்கரை பகுதிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதன்படி, மெரினா கடற்கரையில் கூடுதலாக 103 குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டு, 45 தூய்மைப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். மேலும், சேகரமாகும் குப்பையை உடனுக்குடன் எடுத்து செல்ல ஒரு ‘காம்பேக்டர்’ வாகனமும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.

அதேபோல், பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில், 50 குப்பை தொட்டிகளும், 20 பணியாளர்களும், பாலவாக்கம் கடற்கரையில், 15 பணியாளர்கள், இரண்டு பேட்டரி வாகனங்கள், ஒரு டிராக்டர், ஒரு மெக்கானிக்கல் ஸ்வீப்பர் ஆகியவை ஈடுபடுத்தப்பட்டன. நீலங்கரை கடற்கரையில், ஒவ்வொரு வேலை நேரத்திலும் சுழற்சி முறையில் கூடுதலாக ஆறு துாய்மை பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

காணும் பொங்கல் கொண்டாட சென்னையில் உள்ள கடற்கரைகளில் லட்சகணக்கானோர் கூடினர். அவர்கள் பயன்படுத்திய பிளாஸ்டிக், பாட்டில்கள் போன்ற குப்பையை மாநகராட்சி துாய்மை பணியாளர்கள், இரண்டு நாட்களாக அகற்றினர். அதன்படி, 235 டன் குப்பை அகற்றப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT