பழநி: கோவை கார் சிலிண்டர் குண்டு வெடிப்பு குறித்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மதுரை மண்டலத் தலைவர் முகமது கைசரிடம் என்ஐஏ அதிகாரிகள் பழநி காவல் நிலையத்தில் 2-வது நாளாக விசாரணை நடத்தினர்.
பழநியில் உள்ள திருநகரைச் சேர்ந்தவர் முகமது கைசர்(50). இவர் பழநியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவர், தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் மதுரை மண்டல தலைவராகப் பொறுப்பு வகித்தார். கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் பழநி தொகுதியில் போட்டியிட்டார்.
நேற்று முன்தினம் டெல்லியில் இருந்து பழநிக்கு வந்த என்ஐஏ அதிகாரிகள் 5 பேர் முகமது கைசரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். பழநி நகர் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தனர். இந்நிலையில் அவரிடம் 2-வது நாளாக நேற்றும் விசாரணை தொடர்ந்தது. அதன் அடிப்படையில் பழநியைச் சேர்ந்த சதாம் என்பவரையும் பிடித்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இவர்களிடம் கோவை கார் சிலிண்டர் வெடிப்பு, கர்நாடக மாநில குண்டு வெடிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் குறித்து விசாரித்தனர்.
நேற்றிரவு வரை முகமதுகைசர், சதாம் ஆகியோரிடம் விசாரணை நடத்திய என்ஐஏ அதிகாரிகள் பின்னர் அவர்களை விடுவித்தனர். இன்று மீண்டும் விசாரணைக்கு இருவரையும் ஆஜராகுமாறு கூறியுள்ளனர்.
மேலும் இருவர்: இவர்களோடு ஃபாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த மேலும் இருவரை பழநி நகர் காவல்நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு என்ஐஏ அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.