திருச்சி: கே.என்.ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக, இன்று (ஜன.17) முதல் 12 ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடைபெற உள்ளது.
திமுக முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பியும், திருச்சியைச் சேர்ந்த தொழிலதிபருமான கே.என் ராமஜெயம் 2012-ம் ஆண்டு மார்ச் 29-ம் தேதி நடைபயிற்சி சென்றபோது அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தி செல்லப்பட்டு, கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கு குறித்து தற்போது, எஸ்பி.செல்வராஜ் தலைமையிலான சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர். அவர்கள் இந்த கொலை வழக்கு தொடர்பாக, சந்தேகத்துக்குரிய தமிழகத்தின் முக்கியமான ரவுடிகள் 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி கோரி, திருச்சி ஜே எம்- 6 நீதிமன்றத்தில் மனு செய்தனர். இதில், 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த, நீதிபதி சிவகுமார் அனுமதி அளித்தார்.
அதன்பேரில், சாமி ரவி, திலீப், சிவா ராஜ்குமார், சத்யராஜ், சுரேந்தர் , நாராயணன், சிவா, கணேசன், தினேஷ், கலைவாணன், மாரிமுத்து, செந்தில் ஆகிய 12 ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிறப்பு அனுமதி கேட்டு டெல்லியில் உள்ள ஆய்வகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
அந்த கடிதத்தின்பேரில், ஜன.17-ம் தேதி (இன்று) முதல் 21-ம் தேதி வரை சென்னையில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த டெல்லி ஆய்வக அலுவலர்கள் சம்மதம் தெரிவித்து, சிறப்பு புலனாய்வுக் குழுவினருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
இதையடுத்து, இன்று முதல் நாளொன்றுக்கு 3 பேர் வீதம் 12 ரவுடிகளிடமும் உண்மை கண்டறியும் சோதனை நடத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.