புதுச்சேரி: பொங்கல் பொருட்களை அங்கன்வாடியில் தருவதற்கு பதிலாக பயனாளிகள் வங்கிக்கணக்கில் ரூ.470 தர புதுச்சேரி அரசு முடிவு எடுத்து கோப்பினை ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது.
புதுச்சேரியில் கடந்த ஆட்சியில் இருந்து ரேஷன் கடைகள் இயங்கவில்லை. பொதுமக்கள் ரேஷன் கடைகளை திறந்து பொருட்கள் தரக் கோரி வருகின்றனர். இச்சூழலில் பொங்கலையொட்டி அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.470 மதிப்புள்ள பொங்கல் பொருட்களை அங்கன்வாடி மூலம் தர முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு அரசு ரூ.17.5 கோடி ஒதுக்கீடு செய்து டெண்டர் விதிமுறைகளை வெளியிட்டது.
ஆனால், டெண்டர் விதிமுறைப்படி யாரும் வராததால் பயனாளிகள் வங்கிக் கணக்கில் பணம் தர முடிவு எடுக்கப்பட்டது. அதற்கான கோப்பு தயாரிக்கப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு ஒப்புதல் வந்தவுடன் விரைவில் பயனாளிகள் வங்கிக் கணக்கில் தொகை செலுத்தப்படவுள்ளது. டெண்டர் விதிமுறைகளை மாற்றி மீண்டும் வெளியிட கால அவகாசம் இல்லாததால் இம்முடிவு எடுத்துள்ளதாக அரசு தரப்பில் குறிப்பிடுகின்றனர்.