நீதிமன்ற வளாகங்களில் குண்டு வெடித்த வழக்கில் மதுரையைச் சேர்ந்த 5 பேர் கைதானதால் சதித் திட்ட பட்டியலில் இருந்து மைசூரு ரயில் நிலையம், பாலக்காடு நீதிமன்றம் தப்பியதாக என்ஐஏ போலீஸ் தெரிவித்துள்ளது.
மைசூரு நீதிமன்றம் உட்பட 5 மாநில நீதிமன்ற வளாகங்களில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங் கள் தொடர்பாக மதுரையைச் சேர்ந்த அப்பாஸ் அலி, கரீம்ராஜா, முகமது அயூப், சம்சுதீன், சுலைமான் ஆகியோரை தேசிய புலனாய்வுப் பிரிவு போலீஸார் கைது செய்தனர். இவர்களை சென்னை மற்றும் மேலூர் நீதிமன் றத்தில் ஆஜர்படுத்தி, பெங்களூரு அழைத்துச் சென்றனர்.
இதுபற்றி என்ஐஏ போலீஸ் தரப்பில் கூறியதாவது: அல்-காய்தா என்ற தீவிரவாத அமைப்பின் பெயரால் துணை இயக்கமாக ‘பேஸ் மூவ்மெண்ட்’ என்ற பெயரில் கடந்த 2012-ல் இவ்வியக்கம் உருவாகி உள்ளது. இவ்வியக்கத்தின் ‘லெட்டர் பேட்’ கடிதம் ஒன்றை சமீபத்தில் என்ஐஏ போலீஸ் கைப்பற்றியது. அதில் தீவிரவாதி ஒசாமா பின்லேடனின் படம் இருந்துள்ளது. அக்கடிதம் சென்னையில் இருந்து கேரளா வுக்கு அஞ்சல் மூலம் அனுப்பி இருப்பது தெரியவந்தது. சென்னை, மதுரை பகுதியில் ‘பேஸ் மூவ்மெண்ட்’ இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. ஹைதராபாத்தில் இந்த இயக்கத்தைச் சேர்ந்த ஒருவரிடம் இருந்து ‘பென் டிரைவ்’ பறிமுதல் செய்யப்பட்டது. அதில் பிரதமர் படம் இருந்தது. பிரதமருக்கு மிரட்டல் விடுக்கும் ஆடியோ வாசகமும் பதிவாகி இருந்தது. மேலும், 2017 பிப். 29-ல் மைசூரு ரயில் நிலையம், பாலக்காடு நீதிமன்றம் ஆகிய இடங்களை தகர்ப்போம் என்ற தகவலும் இடம்பெற்று இருந்தது.
பல்வேறு வழக்குகளில் கைதாகும் ஒரு குறிப்பிட்ட தரப்பினருக்கு எதிராக சில நீதிமன்றங்களில் தீர்ப்பு வழங்கப் படுவதால், நீதிபதிகளை மிரட்டும் நோக்கில் நீதிமன்றங்களை குறிவைத்து இந்த இயக்கத்தினர் குண்டுவெடிப்பு சம்பவங்களை அரங்கேற்றி உள்ளனர்.
‘பேஸ் மூவ்மெண்ட்’ இயக் கத்தினர் 5 பேர் கைதானால் பாலக்காடு நீதிமன்றம், மைசூரு ரயில் நிலையம் சதித் திட்ட பட்டியலில் இருந்து தப்பியுள்ளது என்றனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட முகமது அயூப் அலியின் தந்தை முகமது தஸ்லிம், தன் மகனை ஆஜர்படுத்தக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அந்த மனு, நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி.முரளிதரன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.