கோவையில் பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தை தொடங்கிவைத்து மாட்டு வண்டியில் பயணித்த பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு. படம்: ஜெ.மனோகரன் 
தமிழகம்

தமிழகம் என்று அழைப்பதில் தவறில்லை: பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு கருத்து

செய்திப்பிரிவு

கோவை: தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைப்பதில் தவறில்லை என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு தெரிவித்தார்.

கோவை வெள்ளலூர் எல் அண்ட் டி புறவழிச்சாலையை ஒட்டிய பகுதியில் பாஜக சார்பில் நேற்று நம்ம ஊரு பொங்கல் திருவிழா நடைபெற்றது. இதில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு கலந்து கொண்டு ரேக்ளா பந்தயத்தை தொடங்கி வைத்தார். விழாவின் ஒரு பகுதியாக வள்ளி கும்மியாட்டம் நடந்தது. அப்போது நடன கலைஞர்களுடன் இணைந்து குஷ்பு நடனம் ஆடினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் குஷ்பு கூறும்போது, “தமிழ்நாடு என்பதை தமிழகம் என்று ஆளுநர் கூறியதில் தவறில்லை. மத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் அழைக்கின்றனர். அவர்களுக்கு என்ன தேவைப்படுகிறதோ அதற்கேற்ப பேச்சு மாறுகிறது.

அண்ணாமலை துணிச்சலாக, தெளிவாக பேசும்போது சர்ச்சைகள் வரத்தான் செய்யும். அதை ஒன்றும் செய்ய முடியாது. சொல்வதை எல்லாம் கேட்டுக்கொண்டு இருப்பவர் அல்ல அண்ணாமலை. சட்டம்தெரிந்தவர். சட்டரீதியாக நியாயமாக பேசக்கூடியவர் அவர்.

தமிழகம், தமிழ்நாடு இரண்டுமேஒன்றுதான் எனக்கு. நான் மும்பையில் பிறந்து, வளர்ந்திருந்தாலும், 36 ஆண்டுகளாக தமிழ்நாட்டில்தான் இருக்கிறேன். எனது பிள்ளைகள் இங்குதான் பிறந்து வளர்ந்துள்ளன. நான் தமிழச்சி என்று சொல்வதில் பெருமைகொள்கிறேன். தமிழ்நாடோ, தமிழகமோ எப்படி அழைத்தாலும் அது இந்தியாவின் ஒரு பெரிய அங்கம்தான். அதை பிரித்து பார்க்க முடியாது” என்றார்.

SCROLL FOR NEXT