தமிழகம்

விடிய விடிய மரம் வெட்டிய தீயணைப்பு படையினர்: பொதுமக்கள் பாராட்டு

செய்திப்பிரிவு

தீயணைப்பு படையினர் விடிய விடிய மரங்களை வெட்டி சாலைகளை சரி செய்தனர்.

சென்னையை புரட்டிப் போட்ட புயலால் பெரும்பாலான சாலைகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தும், கிளைகள் முறிந்தும் விழுந்தன. இதனால் போக்குவரத்து தடைபட்டது. அதைத் தொடர்ந்து அந்தந்த பகுதி தீயணைப்புப் படையினர் மரம் வெட்டும் இயந்திரம், கோடாரி, அரிவாள் போன்றவற்றுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் ஒரே நாளில் 500-க்கும் அதிகமான இடங்களில் தீயணைப்பு வீரர்கள் மரங்களை வெட்டி சாலைகளை போக்குவரத்துக்கு ஏற்றவாறு சரிசெய்தனர்.

சென்னையில் உள்ள 39 தீயணைப்பு நிலையங் களில் பணிபுரியும் ஆயிரம் வீரர்களும் நேற்று விடிய விடிய சாலையில் நின்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை வளாகத்திலும் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்தன. அதைத் தொடர்ந்து நேற்று காலையில் 2 வாகனங்களில் அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் முறிந்து விழுந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர். மேலும் 2ம் நாளாக நேற்றும் மரங்களை அப்புறப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்றது. நேற்று மாலை 6 மணி வரை 1,674 மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தீயணைப்பு படையினரின் மீட்பு பணிகளை பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர்.

SCROLL FOR NEXT