தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் கடந்த அக்டோபர் மாதம் இருகட்டங்களாக நடைபெறுவதாக இருந்தது. இந்த தேர்தலில் பழங்குடியி னருக்கு போதிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனக்கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.கிருபாகரன், உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு அவசரகதியில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு பஞ்சாயத்து சட்ட விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை எனக்கூறி உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்தும், புதிதாக அறிவிப்பு செய்து டிசம்பர் 31-க்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டார்.
தனி நீதிபதி பிறப்பித்த இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ் மற்றும் ஆர்.பார்த்திபன் ஆகியோர் அடங்கிய அமர்வு தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்தது.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை நேற்று 5வது அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கை பொங்கல் விடுமுறைக்குப் பிறகு விசாரிப்பதாக கூறி தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.