கடலூர் ஆட்சியர் அலுவலக வாயிலில் தலைகீழாக நின்று விட்டு, பின் மனுவை அளித்த விவசாயி மணி. 
தமிழகம்

கடலூர் ஆட்சியர் அலுவலக வாயிலில் தலைகீழாக நின்று மனு அளித்த விவசாயி

செய்திப்பிரிவு

கடலூர்: சிதம்பரம் அருகே உள்ள கீழ்அனுவம்பட்டு சாலைக்கரை பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி மணி. இவர், நேற்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைகேட்பு கூட்டத்திற்கு ஒரு மனுவுடன் வந்தார்.

அவர் திடீரென, மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் தலைகீழாக நின்றார். அப்போது அங்கு பணியில் இருந்த போலீஸார் அவரை அழைத்து விசாரித்தனர். அதற்கு அவர், சிதம்பரம் அருகே உள்ள பாசிமுத்தான் ஓடையில் சிதம்பரம் நகராட்சி நிர்வாகம் கழிவுநீர் சாக்கடையை வெளியேற்றுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது.

இதனால் இந்த ஓடை நீரை இப்பகுதி மக்கள், கால்நடைகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, இந்த ஓடையில் கழிவுநீர் சாக்கடை கலப்பதை தடுத்து நிறுத்திடவேண்டும். மேலும் கீழ்அனுவம்பட்டு, மேல் அனுவம்பட்டு, அம்பு பூட்டிய பாளையம், சி.முட்லூர், தில்லை நாயகபுரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஊர் மக்கள் இந்த தண்ணீரை பயன்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி மனு அளிக்க வந்தாக தெரிவித்தார்.

இதையடுத்து போலீஸார் அவரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வைத்து, இதுபோன்று நடந்து கொள்ளக் கூடாது என்று அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.

SCROLL FOR NEXT