மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தின் கீழ் பக்தர்களுக்கு அமைச்சர் மூர்த்தி உணவு பரிமாறினார்.
மதுரை மீனாட்சி அம்மன், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடக்க விழா சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி பக்தர்களுக்கு உணவு பரிமாறினர்.
இதில் மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர், மேயர் இந்திராணி, எம்எல்ஏக்கள் பூமிநாதன், வெங்கடேசன், இந்து சமய அறநிலையத் துறை மண்டல இணை ஆணையர் செல்லத்துரை, கோயில் துணை ஆணையர் ஆ.அருணாசலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.