ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு உட்பட்ட இடையகோட்டையில் 117 ஏக்கர் நிலப்பரப்பில் 4 மணி நேரத்தில் 6 லட்சம் மரக்கன்றுகளை நடவுசெய்து உலக சாதனை நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.
ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு உட்பட்ட இடையகோட்டையில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள திருவேங்கடநாதப் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான 117 ஏக்கர் நிலத்தில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்திருந்தன. இந்த இடத்தில் குறுங்காடு வளர்ப்பு திட்டத்தை செயல்படுத்த, தொகுதி எம்எல்ஏவும், உணவுத் துறை அமைச்சருமான அர.சக்கரபாணி திட்டமிட்டார்.
இதைத் தொடர்ந்து இந்த இடத்தை துய்மைப்படுத்தி மரக்கன்றுகளை நட, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும், உலக சாதனை முயற்சியாக 4மணி நேரத்தில் 6 லட்சம் மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டது.
நேற்று காலை 9.20 மணிக்குதொடங்கி 4 மணி நேரத்துக்குள்வேம்பு, புங்கை, நாவல், பூவரசுபோன்ற 22 வகையான மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், தன்னார்வலர்கள் உட்பட 16,500 பேர் இணைந்து ஒரே நேரத்தில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனர்.
நிறைவாக குறுங்காடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மூலிகைப் பூங்காவில் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2 மரக்கன்றுகளை நட்டார். தொடர்ந்து, அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி, மா. மதிவேந்தன் ஆகியோரும் மரக்கன்றுகள் நட்டனர்.
பின்னர் நடந்த விழாவுக்கு ஆட்சியர் ச.விசாகன் தலைமை வகித்தார். அப்போது 6 லட்சம் மரக்கன்றுகள் நட்டு சாதனை படைத்ததற்கான பதக்கம் மற்றும் சான்றிதழை அமெரிக்காவைச் சேர்ந்த எலைட் வேர்ல்டு ரெக்கார்ட் நிறுவன நிர்வாக அதிகாரிகள் ரவி பால்பக்கி,நவுரா ஆகியோர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினர்.
இதே போல், ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி, இந்தியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி, தமிழன் புக்ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகிய உலகசாதனை அங்கீகரிப்பு நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகளும் சான்றிதழ்களை வழங்கினர்.
நிகழ்ச்சியில் திண்டுக்கல் எம்.பி. வேலுச்சாமி, எம்எல்ஏக்கள் வேடசந்தூர் காந்திராஜன், பழநி செந்தில்குமார், கூடுதல் ஆட்சியர் தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மாவட்ட வன அலுவலர் பிரபு, பசுமை இயக்க திட்ட இயக்குநர் தீபக் ஷர்மா கலந்து கொண்டனர்.