சென்னை: சேலம் இரும்பு உருக்காலையை தனியாருக்கு விற்றால் தமிழகமேஓரணியில் திரண்டு மத்திய அரசுக்கு எதிராக போராடும்என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: சேலம் உருக்காலையைத் தனியாருக்கு விற்பனை செய்வதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதாக மத்திய இரும்பு எஃகு துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் உருக்காலையின் பங்குகளை விற்பதற்கான ஏலம் தொடர்பான நடவடிக்கைகள் வரும் ஜனவரி மாதம் நடைபெறும் என்றும்அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
அந்த ஆலைக்குச் சொந்தமான 4,000 ஏக்கர் நிலங்களைத் தனியாருக்கு தாரை வார்க்க வேண்டும் என்பதுதான் பிரதமர் மோடி அரசின் ஒரே நோக்கம் என்பது அவர்கள் காட்டும் அவசரத்திலிருந்து தெளிவாகத் தெரிகிறது. சேலம் இரும்பாலைக்குப் புத்துயிரூட்டுவதற்கு பதிலாக அதை விற்பனை செய்யமத்திய அரசு முயல்வது தமிழகத்துக்குச் செய்யும் அநீதியாகும்.
ஆலைக்கு புத்துயிரூட்டாவிட்டால் அந்த ஆலை அமைந்துள்ள 4 ஆயிரம் ஏக்கர் நிலங்களையும், அவற்றை வழங்கிய நில உரிமையாளர்களிடமே அரசு ஒப்படைக்க வேண்டும்.
தனியாருக்கு விற்றால் அதில் பணியாற்றும் ஊழியர்கள் நிலையை சற்றும் யோசிக்காத மோடி அரசுக்கு எதிராக தமிழகமே ஓரணியில் திரண்டு போராடும்.