தமிழகம்

சரஸ்வதி சட்டக் கல்லூரிக்கு அனுமதி அளிக்காவிட்டால் போராட்டம்: ராமதாஸ் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

சரஸ்வதி சட்டக் கல்லூரிக்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பாமக நடத்தும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் தனியார் சட்டக் கல்லூரி தொடங்க தடை விதிக்கும் சட்டம் செல்லாது. வன்னியர் கல்வி அறக்கட்டளையின் சரஸ்வதி சட்டக் கல்லூரிக்கு இணைப்பு அனுமதி வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து 53 நாட்களாகியும் அத்தீர்ப்பை தமிழக அரசு செயல்படுத்தவில்லை. இது கண்டிக்கத்தக்கதாகும்.

நாகை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களில் சட்டக்கல்லூரி இல்லாத நிலையில் இந்த கல்லூரி அம்மாவட்ட மாணவர்களுக்கு பயன் உள்ளதாக அமையும். கல்வியைப் பொறுத்தவரை தமிழகத்தில் கடைசி இடத்தில் இருப்பது விழுப்புரம் மாவட்டம்தான். இம்மாவட்டத்தில் புதிய சட்டக் கல்லூரி தொடங்குவது அவசியமாகும்.

எனவே, உயர் நீதிமன்றத்தின் ஆணை மற்றும் அறிவுரையை மதித்து, குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் சட்டக் கல்லூரிக்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பாமக நடத்தும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

          
SCROLL FOR NEXT