சென்னை: சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவற்றுக்காக தமிழகஅரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் டிசம்பர் 13-ம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், தொடர் கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் அன்றைய தினம் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் தள்ளிவைக்கப்பட்டு, மதுரை உள்ளிட்ட மற்ற மாவட்டங்களில் குறிப்பிட்ட தேதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்நிலையில், டிச.13-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறாத இடங்களில் அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அந்த வகையில், சென்னை முழுவதும் 30-க்கும்மேற்பட்ட இடங்களில் அதிமுகவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வட சென்னை தெற்கு, கிழக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் தலைமையில் மின்ட் சாலை மற்றும் பெரம்பூரிலும், தென் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் விருகை ரவி தலைமையில், எம்.ஜி.ஆர்.நகர், விரும்பாக்கம், கிண்டி, ஜாபர்கான்பேட்டை ஆகியபகுதியிலும், வட சென்னை வடக்கு(கிழக்கு) மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையில் எருக்கஞ்சேரி, ஆர்.கே.நகர் பகுதியிலும், வட சென்னை தெற்கு(மேற்கு) மாவட்டம் சார்பில் அமைப்புச் செயலாளர் பாலகங்கா தலைமையில், சக்கரை செட்டி தெரு,சூளை ஆகிய பகுதிகள் உட்படசென்னையில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்நிலையில், சென்னை ஆர்கேநகரில் மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையில் நடைபெற்ற அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பால்விலை உயர்வைக் கண்டித்து பொதுமக்களுக்கு 50 பைசாவுக்கு பால் பாக்கெட் விற்பனை செய்யப்பட்டது. அப்போது அப்பகுதி மக்கள் 50 பைசாவைக் கொடுத்து ஒருவருக்கொருவர் முண்டியடித்துக் கொண்டு பால்பாக்கெட்டுகளை வாங்கிச் சென்றனர். இதனால் பொதுமக்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மேலும், மின்ட் சாலையில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் டி.ஜெயக்குமார் பேசும்போது, ``நீட் தேர்வு ரத்து, இல்லத்தரசிகளுக்கு மாதம்ரூ.1000 உதவித்தொகை, மாதந்தோறும் மின் கணக்கீடு, கல்விக்கடன், நகைக்கடன் ரத்து, காஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம், ஒரு வருடத்தில் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு என திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை இதுவரை இந்த அரசு நிறைவேற்றவில்லை. வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு பதிலாகச் சொத்து வரி, பால் விலை, மின் கட்டணம், கழிவுநீர் வரி போன்றவற்றை உயர்த்தி மக்களைத் துன்புறுத்துகிறது'' என்றார்.