பரந்தூர் பகுதியில் 2-வது விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, காஞ்சிபுரம் ஏகனாபுரத்தில் இருந்து நடைபயணம் மேற்கொண்ட கிராம மீட்புக் குழுவினர். 
தமிழகம்

பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு மக்கள் எதிர்ப்பு: அமைச்சர்கள் தலைமையில் இன்று ஆலோசனை

செய்திப்பிரிவு

பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், திட்டம் தொடர்பாக இன்று அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன், எ.வ.வேலு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நெருக்கடி மற்றும் விமானங்களை கையாளும் திறன் குறித்த பிரச்சினை இருப்பதால், சென்னையில் 2-வது விமான நிலையம் அமைக்க வேண்டியது அவசியமாகிறது. இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்க முடிவெடுக்கப்பட்டு. அதற்கான நிலம் கையகப்படுத்துவது குறித்தும் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, பரந்தூர் பகுதியில் நிலம் கையகப்படுத்துவதற்கு 13 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக ஆய்வு செய்த அமைச்சர்கள், நிலத்துக்கு உரிய சந்தைவிலை, வீட்டில் ஒருவருக்கு வேலை, மாற்று இடம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அறிவித்தனர்.

நிலம் கையகப்படுத்துதல்: அத்துடன், அமைச்சர்களே நேரில் சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, நிலம் கையகப்படுத்துவதற்கான அடிப்படை பணிகளை, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள அலுவலகம் மூலம் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

மறுபுறம், 145 நாட்களாக நடைபெற்ற பொதுமக்கள் போராட்டத்தின் அடுத்த கட்டமாக, 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கையில் கருப்புக் கொடி ஏந்தி ஏகனாபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி நடத்தினர்.

இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் இன்று பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துகின்றனர்.

இதில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படுகிறது.அதைத் தொடர்ந்து போராட்டக் குழுவுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT