கடலூர் துறைமுகத்தில் நேற்று மீன் வாங்க குவிந்திருந்த கூட்டம். 
தமிழகம்

கடலூர் மீன் மார்க்கெட்டில் குறைந்தளவு மீன்வரத்து இருந்தபோதிலும் கூட்டம் அலைமோதல்

செய்திப்பிரிவு

விருத்தாசலம்: கடலூர் மீன் மார்க்கெட்டில் குறைந்த அளவு மீன் வரத்து இருந்தபோதிலும் மீன்களை வாங்க துறைமுகத்தில் கூட்டம் குவிந்தது.

வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த சில நாட்களாக கடலூர் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் கடலூர் துறைமுகத்தில் படகுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஆனால் நாட்டுப் படகு மற்றும் சிறிய வகை ஃபைபர் படகு வைத்திருப்பவர்கள் மட்டும் அவ்வப்போது கடலுக்குச் சென்று மீன்பிடித்து வந்து விற்பனையில் ஈடுபட்டு வந்தனர்.

இதனால் மீன்வரத்து வழக்கத்தைவிட குறைவாக இருந்து வந்தது. இதற்கிடையில் பலரும் சபரிமலை செல்வதற்காக மாலை அணிந்து விரதமிருந்ததால் அசைவ உணவை தவிர்த்து வந்தனர். தற்போது அவர்களில் பெரும் பாலானோர் சபரிமலைக்கு சென்று விரதத்தை முடித்துள்ளதால், மீண்டும் அசைவ உணவு பக்கம் திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகாலை முதலே அசைவ உணவுசாப்பிடுவோர் நேற்று கடலூர் துறைமுகத்தில் குவிந்த வண்ணம் இருந்தனர். குறைந்த அளவு மீன்வரத்து இருந்ததால், மீன்களின் விலையும் சற்று கூடுதலாக இருந்தது. உதாரணமாக வஞ்சரம் ரூ.600, பெரியவகை இறால் ரூ.550, அதலை ரூ.450, பாறை ரூ.350 என்ற விலைக்கு விற்பனையானதையும் பொருட்படுத்தாமல் மீன் வாங்கு வதில் ஆர்வம் காட்டினர்.

SCROLL FOR NEXT