தமிழகம்

உத்தரவிட்டும் ஆக்கிரமிப்பை அகற்றாத மாநகராட்சி அதிகாரிகளை ஏன் இடைநீக்கம் செய்ய கூடாது? - உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி

செய்திப்பிரிவு

சென்னை: ஆக்கிரமிப்பை அகற்றுமாறு பிறப்பித்த உத்தரவை 2 ஆண்டுகளாக அமல்படுத்தாத சென்னை மாநகராட்சி அதிகாரிகளை ஏன் இடைநீக்கம் செய்ய உத்தரவிடக் கூடாது என உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

‘சென்னை எருக்கஞ்சேரியை சேர்ந்த சத்தியநாதன், சித்ரா ஆகியோர் பொது சாலையை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டியுள்ளனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும்’ என்று கோரிரவீந்திர ராம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2020-ம்ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது, ‘சம்பந்தப்பட்ட கட்டிட உரிமையாளர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. விளக்கம் கிடைத்த பிறகு, நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று மாநகராட்சி தரப்பில் உறுதிமொழி அளிக்கப்பட்டது. இதையடுத்து, மனுதாரர் குறிப்பிட்டுள்ளது போல ஆக்கிரமிப்புகள் இருந்தால், அதை அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த உத்தரவை மாநகராட்சி அதிகாரிகள் அமல்படுத்தவில்லை என்று கூறி,மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, பொறியாளர் ராதாகிருஷ்ணன், மண்டல பொறியாளர் பார்த்திபன் ஆகியோருக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் ரவீந்திர ராம் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஆர்.ஹேமலதா அமர்வில் இந்த வழக்கு விசாரணை நடந்தது.அப்போது நீதிபதிகள், ‘‘ஆக்கிரமிப்பை அகற்றும்படி நீதிமன்றம்உத்தரவிட்ட பிறகும், 2 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? இதற்காக, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை ஏன் இடைநீக்கம் செய்ய உத்தரவிடக் கூடாது?’’ என்று கேள்வி எழுப்பினர்.

பின்னர், இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்துமாநகராட்சி அதிகாரிகள் பதில்அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி முதல் வாரத்துக்கு தள்ளிவைத்துள்ளனர்.

SCROLL FOR NEXT