தமிழகம்

கோவை கார் சிலிண்டர் வெடித்த வழக்கில் 5 பேரை காவலில் விசாரிக்க என்ஐஏ மனு

செய்திப்பிரிவு

சென்னை: கோவையில் கடந்த அக்.23-ம் தேதி காரில் சிலிண்டர் வெடித்தது. இதில், ஜமேஷா முபின்(28) என்பவர் பலியானார். இதையடுத்து இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் விசாரித்தனர். இதில், தற்கொலைப் படைதாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இந்த வழக்கு தொடர்பாக கோவையைச் சேர்ந்த முகமது தல்கா(25), முகமது அசாருதீன்(23), முகமது ரியாஸ்(27), பெரோஸ் இஸ்மாயில்(27), முகமது நவாஸ் இஸ்மாயில்(26), அப்சர்கான்(26) ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து, கோவை போத்தனூரைச் சேர்ந்த முகமது தவ்பிக்(25), நீலகிரி மாவட்டம், குன்னூரைச் சேர்ந்த உமர் பாரூக்(39), தெற்கு உக்கடத்தைச் சேர்ந்த பெரோஸ்கான்(28) ஆகிய மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு பூந்தமல்லி தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முகமது அசாரூதீன், அப்சர் கான், பெரோஸ் இஸ்மாயில், உமர் பாரூக், பேரோஸ்கான் ஆகிய 5 பேரை தங்களது காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ அதிகாரிகள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இதற்காக 5 பேரையும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் என்ஐஏ அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். இந்த மனு மீதான விசாரணை இன்று (டிச.15) இன்றும் நடைபெறும் என நீதிபதி இளவழகன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT